ஊழியத்தின் நோக்கம்
மத்தேயு 10:8ல் இயேசு சென்னபடி “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். எங்கள் ஊழியத்தின் உள் நோக்கம் பணத்திற்காக இருக்கக் கூடாது என்று உறுதியாய் தீர்மானித்து இருக்கின்றோம். நாங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் தான் பெற்றதும், பிரசங்கித்ததும், வாழ்ந்து காட்டியதுமான வெளிப்பாட்டின் அடிசுவற்றை உறுதியாய் பின்பற்ற எத்தனம் செய்கிதிருக்கின்றோம்.
அவர் அப்போஸ்தலர் நடபடிகள் 20: 33, 34ல் இவ்வாறு கூறுகிறார் “ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது”
மேலும் அவர் 2 தெசலோனிக்கேயர் 3: 7-9ல் “இன்னவிதமாய் எங்களை பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் இல்லையென்பதினாலே அப்படி செய்யாமல், நீங்கள் எங்களை பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படி செய்தோம்”
இதோடுகூட அவர் வசனங்கள் 10-12ல் இன்னும் அதிகமாய் அவர் வலியுறுத்துவது என்னவென்னில் “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்கு கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு, தங்கள் சொந்த சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்கு கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.” இப்படிப்பட்ட வார்த்தைகளினிமித்தம் தேவனுடைய ஆலோசனை வழி நடத்துதலின் படி சிறு தொழில் தொடங்கி (வீடு பெருக்கும் துடப்பம் தயாரித்தல்) அதிலிருந்து வரும் சிறிய ஆதாயத்தை கொண்டு இந்த ஊழியத்தை செய்து கொண்டிருக்கின்றோம்.
கடந்த எழு ஆண்டுகளாக விழிப்புரத்தில் போதகர்களுக்கென்று ஐக்கிய கூட்டமும் கடந்த மூன்று ஆண்டுகளாக தென் மாநிலங்களிலுள்ள தனியார் தொலைகாட்சி சேனல்களில் தொடர் போதனை அளித்து கொண்டிருக்கின்றோம் (தூத்துக்குடி – சத்தியா டிவி, JTK டிவி, கோவில்பட்டி – சத்தியா டிவி, திருநெல்வேலி – JTK டிவி, நாகர்கோவில் – Gospel டிவி, வள்ளியூர் – விண் டிவி, இன்னும் சில)
“கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்” என்று லூக்கா 6:38ல் இயேசு சொன்னபடியும் “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று அப்போஸ்தலர் 20:35ல் சொன்னபடியும் “கிறிஸ்துவின் சுவிஷேசத்தை செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்கு பலன்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரி 9:18ல் கூறியபடியேயும் நாங்கள் இந்த ஊழியத்தை செய்வதால் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரிரப்பிரகாரமாகவும் பெற்ற நன்மைகள் ஏராளம்
இந்த ஊழியத்தின் மூலம் வேத வசனத்தைக் கற்றுக் கொண்டவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்திலும் பொருளாதாரத்திலும் குடும்ப வாழ்விலும் பெற்றுக் கொண்ட நன்மைகள் கணக்கிலடங்காதவை. ஒரு சிலர் மட்டுமல்லாமல் உலகத்தின் எல்லா பகுதியில் வாழ்கின்ற எல்லா மனிதர்களும் அறியாமை இருள் அகன்று சத்தியத்தின் அறிவடையவேண்டும் என்றும், இலவசமாய் தேவன் அருளும் பாவ மன்னிப்பு, இலவச நீதி, பரிசுத்தம், இலவசமாய் தேவனுடைய வருகையில் எடுத்துகொள்ளப்படுதல் போன்ற சத்தியங்களை விளங்கி, தாங்களும் ஒரு ஊழியக்காரர்தான் என்பதை உணர்ந்து, எந்த ஒரு மனிதனின் அல்லது பாரம்பரியத்தின் அடிமைத்தனம் இல்லாமல், தனியாகவோ அல்லாது குழுவாகவோ (சபை) இணைந்து தேவனுடைய ராஜியத்தை கட்ட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கமாக உள்ளது.
எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள வேத போதனைகளைக் கேளுங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இங்கு ஏற்றம் செய்யப்பட்டுள்ள செய்திகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகின்றோம். நீங்கள் இங்குள்ள அனைத்து செய்திகளையும் இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்
மற்றுமல்லாமல் அவற்றை எத்தனை நகலாக்கம் வேண்டுமானாலும் செய்து இலவசமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் கொடுக்கலாம். எந்த ஒரு காப்புரிமை தடையும் இதற்கு கிடையாது. “